மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவில் மேலும் ஒரு இந்து கோயிலை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சூறையாடிய சம்பவம் நடந்துள்ளது.
பஞ்சாபைப் பிரித்து காலிஸ்தான் என்ற தனிநாட்டை உருவாக்க வேண்டும் என்பது காலிஸ்தான் ஆதரவாளர்களின் நீண்ட கால கோரிக்கையாகும். இந்தஅமைப்பினர் இந்தியா உள்ளிட்டசில நாடுகளில் ஒடுக்கப்பட்டு விட்டாலும் கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.
சிவா – விஷ்ணு கோயில்
இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் அமைந்துள்ள சிவா- விஷ்ணு கோயிலுக்குள் நேற்று முன்தினம் காலிஸ்தான் ஆதரவாளர்கள் புகுந்தனர். கோயில் வளாகத்தில் இருந்த பொருள்களை அவர்கள் அடித்து சூறையாடினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
ஆஸ்திரேலியாவில் தை பொங்கல் உள்ளிட்ட பண்டிகையின் போது இந்த சிவா – விஷ்ணுஇந்து கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். அவர்கள் வரும்போது கோயில் மோசமான நிலையில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவர்கள் இவ்வாறு செயல்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக விக்டோரியா மாகாண போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கோயிலுக்கு வந்த பக்தைஉஷா செந்தில்நாதன் இதுதொடர்பாக கூறும்போது, ‘‘இலங்கையில் மதரீதியாகவும், இனரீதியாகவும் துன்புறுத்தல்களை எதிர்கொண்டுதான் ஆஸ்திரேலியாவில் குடிபுகுந்துள்ளோம். இது இந்துக்கள் அமைதியாக வழிபாடு நடத்தும் கோயில்.
காலிஸ்தான் ஆதரவாளர்கள் தங்கள் கோபத்தை இந்த இடத்தில் காட்டுவது சரியல்ல. இது அவர்களது மோசமான வெறுப்பு மனப்பான்மையைக் காட்டுகிறது. அவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும். வழிபாடு நடத்தும் கோயில்கள் மீது தாக்குதல் நடத்துவது சரியான செயல் அல்ல’’ என்றார்.
இதுகுறித்து விக்டோரியாவிலுள்ள லிபரல் கட்சி எம்.பி. பிராட் பட்டின் கூறும்போது, “எந்த வகையிலும் நம் எதிர்காலத்தை வெறுப்பின் அடிப்படையில் கட்டியெழுப்ப முடியாது. இதுபோன்றசம்பவங்களுக்கு ஆஸ்திரேலியாவில் இடமில்லை. தாக்குதல்நடத்தியவர்கள் தண்டிக்கப்படவேண்டும்” என்றார்.
விக்டோரியா மாகாணத்தில் அமைந்துள்ள சுவாமி நாராயண் கோயிலை காலிஸ்தான் ஆதரவாளர்கள் கடந்த வாரத்தில்தான் சூறையாடினர்.
அந்த சம்பவம் நடந்த அடுத்த வாரத்திலேயே 2-வது கோயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுஉள்ளது.
கோயிலில் இருந்த பொருட்களை காலிஸ்தான் ஆதரவாளர்கள் அடித்து சூறையாடினர்.
GIPHY App Key not set. Please check settings