Last Updated : 08 Aug, 2023 02:57 PM
Published : 08 Aug 2023 02:57 PM
Last Updated : 08 Aug 2023 02:57 PM

புதுடெல்லி: கடந்த 2014 முதல் 2023 வரை வங்கிகளால் தள்ளுபடி (ரிட்டர்ன் ஆஃப்) செய்யப்பட்ட கடன் தொகை ரூ.14.5 லட்சம் கோடி ரூபாய். இந்த தகவல், திமுக எம்.பி கனிமொழியின் கேள்விக்கு மத்திய நிதித் துறை இணையமைச்சர் பகவத் காரத் பதிலில் அளித்துள்ளார்.
கனிமொழி எம்.பி. கேள்வி: திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற திமுக துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி. மக்களவையில் நேற்று எழுப்பியக் கேள்வியில், '2014 முதல் தள்ளுபடி செய்யப்பட்ட பெருநிறுவனங்களின் கடன் தொகை தொடர்பான விவரங்கள், ஆண்டு வாரியாக என்ன? தள்ளுபடி செய்யப்பட்டு பின் மீட்கப்பட்ட கார்ப்பரேட் கடன்கள் விவரங்கள் என்ன? அதிகபட்ச தள்ளுபடி பெற்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் விவரங்கள், அந்தக் கடனை தள்ளுபடி செய்த வங்கியின் விவரங்கள் என்ன?' எனக் கேட்டிருந்தார்.
மத்திய இணை அமைச்சர் பதில்: இந்தக் கேள்விகளுக்கு நிதித்துறை இணை அமைச்சர் பகவத் காரத் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: 'இந்திய ரிசர்வ் வங்கி பெருநிறுவனங்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்ட விவரங்கள் தங்களால் பராமரிக்கப்படுவதில்லை என்று தெரிவித்துள்ளது. அதேநேரம் எஸ்சிபி எனப்படும் பட்டியலிடப்பட்ட வர்த்தக வங்கிகள் பெரு நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஆண்டுவாரியாக தள்ளுபடி செய்யப்பட்ட கடன் விவரங்களை ரிசர்வ் வங்கியிடம் தெரிவித்துள்ளன.
அதன்படி 2014-15 ஆம் நிதியாண்டில் பெருநிறுவனங்கள் மற்றும் சேவை நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகை ரூ.18,178 கோடி. இதே நிதியாண்டில் மொத்த தள்ளுபடி கடன் தொகை ரூ.58,786 கோடி ரூபாய். 2015-16 நிதியாண்டில் மொத்தம் ரூ.70,413 கோடி ரூபாய், 2016-17 நிதியாண்டில் ஒரு லட்சத்து ரூ,8,373 கோடி, 2017-18 நிதியாண்டில் ரூ.1,61,328 கோடி, 2018-19 நிதியாண்டில் ரூ,2,36,265 கோடி, 2019-20 நிதியாண்டில் ரூ.2,34,170 கோடி ஆகும்.
2020-21 நிதியாண்டில் ரூ.2,02,781 கோடி, 2021-22 நிதியாண்டில் ரூ.1,74,966 கோடி, 2022-23 நிதியாண்டில் ரூ.2,09,144 கோடி தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகைகளாகும். ஆக மொத்தம் ரூ.14,56,226 கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் பெருநிறுவனங்கள் மற்றும் சேவை நிறுவனங்களுக்காக தள்ளுபடி செய்யப்பட்ட தொகை ரூ.7,40,968 கோடி ரூபாய் ஆகும். இவற்றில் எஸ்சிபி எனப்படும் பட்டியலிடப்பட்ட வர்த்தக வங்கிகள் 2014 ஏப்ரல் மாதத்தில் இருந்து 2023 மார்ச் மாதம் வரை மொத்தம் ரூ.2,4,668 கோடி மதிப்புக்கு தள்ளுபடி கடன்களை மீட்டுள்ளது. பெருநிறுவனங்களிடம் இருந்து மீட்ட தொகையும் இதில் அடக்கம்” என்று அமைச்சர் பதிலளித்துள்ளார்.
எந்தெந்த பெருநிறுவனங்களுக்கு எந்தெந்த வங்கிகள் எவ்வளவு கடன் தொகை தள்ளுபடி செய்திருக்கின்றன என்ற விவரம் நிதித்துறை இணையமைச்சரின் பதிலில் இடம்பெறவில்லை.
தவறவிடாதீர்!
- செந்தில் பாலாஜியிடம் தினமும் 9 மணி நேரம் வரை விசாரணை நடத்த அமலாக்கத் துறை திட்டம்
- திமுக அரசின் தோல்வி, துரோகத்தை மறைக்க அன்புமணி மீது பழி: அமைச்சருக்கு ஜி.கே.மணி பதிலடி
- மின் கம்பத்தை அகற்றாமல் சாலை அமைக்கும் பணி: அக்கறை செலுத்துமா நெடுஞ்சாலைத் துறை?
- விழுப்புரம், கள்ளக்குறிச்சி டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக 5 ரூபாய் வசூல்