Last Updated : 21 Aug, 2023 07:19 AM
Published : 21 Aug 2023 07:19 AM
Last Updated : 21 Aug 2023 07:19 AM

புதுடெல்லி: கடந்த 2022-23 நிதி ஆண்டுக்கு வருமான வரி கணக்கு (ஐடிஆர்) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31-ம் தேதியுடன் முடிந்தது.
இதில், 6.77 கோடி ஐடிஆர் தாக்கல் செய்யப்பட்டன. அதற்கு முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 16.1 சதவீதம் அதிகம். 2021-22 நிதி ஆண்டுக்கு 5.83 கோடி ஐடிஆர் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
கடந்த நிதி ஆண்டில் மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் ஐடிஆர் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் தாக்கல் செய்யப்பட்ட மொத்த ஐடிஆர் விண்ணப்பங்களில், இந்த 5 மாநிலங்களின் பங்கு 48 சதவீதமாக உள்ளது.
கடந்த 9 ஆண்டுகளில் உத்தரபிரதேச மாநிலத்தில் ஐடிஆர் தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் 2014-ம் ஆண்டில் 1.65 லட்சம் ஐடிஆர் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 2023-ம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 11.92 லட்சமாக உயர்ந்துள்ளது.